Monday, October 28, 2013

உன்தலைவிதி உன் கைகளில்

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

குட்டி கதை

இதுதான் பார்வை!

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

Friday, October 4, 2013

ஆன்மிகம்


அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

கேன்சரை காட்டிக் கொடுக்கும் கண்கள்



கண்களை உடம்பின் கண்ணாடி என்று எவ்வளவு அர்த்தத்துடன் கூறியிருக்கிறார்கள் என்பதை இதை படித்ததும் தெரிந்து கொள்வீர்கள். உடலுக்குள் எங்கே என்ன கோளாறு என்றாலும் அதைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில் புற்றுநோயின் அறிகுறிகளையும் கண்களில் கண்டுபிடிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா... ஆமாம் உடலின் எந்த பாகத்தில் புற்று நோய் வந்தாலும் அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்கும் என்கிற விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் அது பற்றி விரிவாக பேசுகிறார்.

கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்சனை இப்படி வயசானவர்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தறவங்கள் தான் அதிகம்.. வயசானா பார்வை மங்கறதும் பூச்சி பறக்கறதும் சகஜம்தான்னு விட்டுருவாங்க. ஆனா அதெல்லாம் அவங்க உடம்புல எங்கேயே புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.

நடுத்தர வயதுக்கு பிறகு பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப்போறது, இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி கண்களிலும் அதை கண்டுபிடிக்கலாம்.

மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன், ரெட்டினானு சொல்லற விழித்திரைக்குத்தான் போகுது. அந்த ஆக்சிஜன் விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடுங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும்.. உடம்போட ரத்த ஒட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இனைஞ்சு போகும். அதனால் ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா விழித்திரைக்கும் போகும். விழித்திரையில தண்ணீர் கசிஞ்சி விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வை குறைபாடு தான் இதோட அறிகுறி..

சிலருக்கு non hodgkin's lymphoma னு சொல்லக்கூடிய ரத்த புற்றுநோய் இருக்கும். கண்கள்ல பூச்சி பறக்கிறது. வெளிச்சம் அதிகமாக தெரியறதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும் போது ஏற்பட்ட பிரச்சனைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்பு படுத்தி பார்த்து வேற வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால தான் அதை சரியாக கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையை பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங்கிறதை உறுதி செய்து அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும் என்கிற டாக்டர் வசுமதி கண்களில் தென்படுகிற எந்த சிறு பிரச்சனைகளையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என முடிக்கிறார் முத்தாய்ப்பாக.

ஆரோக்கியத்தை காக்க வேண்டுமா?


இன்றைய சூழலில் நம் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது பெரிய விஷயமாகிவிட்டது. வேகமாக செல்லும் மக்கள் இப்போது நம்பியிருப்பது ஃபாஸ்ட் ஃபுட்டை தான். பின் எப்படி ஆரோக்கியம் நிலைக்கும்ப சரி, ஆரோக்கியத்தை காக்க வேண்டுமா? இந்த வருட இறுதிக்குள் உடல் எடை குறைய வேண்டுமா?

அல்லது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா அதற்காக ஒன்றும் கடுமை வாய்ந்த உணவுப் பழக்கத்தை கடை பிடித்து ஐஸ்க்ரீம், கேக் போன்ற டெசர்ட்களை தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

அதற்கு பதிலாக அன்றாடம் உண்ணும் உணவுகளில் சிறு மாற்றங்களும், சமைக்கும் முறையில் சிறிய மாற்றங்களையும் கொண்டு வந்தால் போதுமானது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கலோரிகளை குறைத்து கொழுப்பை எரிக்க சில எளிய சமையல் வழிமுறைகளை பற்றிக் கொடுத்துள்ளது. அதைப்படித்து, அதன்படி சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் ஆரோக்கியமாகவும், சரியான எடையுடனும் இருக்க முடியும்.

கொழுப்பின் அளவை குறைந்த அளவில் பராமரிக்கவும் :

கொழுப்பை சுத்தமாக ஒதுக்க தேவையில்லை, அதனை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சுத்தரிக்கப்படாத இயற்கை கொழுப்புகளை கொண்ட ஆலிவ் ஆயில், நட்ஸ், விதைகள், மீன், சோயா மற்றும் அவகேடோ/வெண் ணெய் பழங்களை உபயோ கிக்கலாம். அதற்கு காரணம் உடல் நலத்திற்கு துணை புரியும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் இவைகளில் அடங்கியுள்ளது.

ஆடை நீக்கிய பால் அல்லது பசுவின் பாலை பயன்படுத்தவும் :

கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள பாலுக்கு பதி லாக, ஆடை நீக்கிய பால் அல்லது பசுவின் பாலை பயன்படுத்துங்கள். மேலும் தயிர் வேண்டுமானால், ஆடை நீக்கிய பாலில் இருந்து தயார் செய்து கொள்ளுங்கள்.

பொரியல் உணவுகளை தேர்ந்தெடுக்கவும் :

உணவுகளில் நிறைய பொரியல்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

சமைக்கும் ஸ்டைலை மாற்றவும் :

வாட்டுதல், வதக்கல், வேக வைத்தல், கனலில் வேக வைத்தல், மெதுவாக சமைத்தல், வறுத்தல் போன்ற சமைக்கும் ஸ்டைல்களை பின்பற்றுங்கள். இவை அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளாகும்.

வெண்ணெய் பயன்படுத்துதலை தவிர்க்கவும் :

வெண்ணெய் பயன்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும். அதேபோல் நீண்ட நேரமாக பொரித்த உணவுகளையும், நீண்ட நேரம் வதக்கிய விலங்கு கொழுப்பு அடங்கியுள்ள உணவுகளையும் தவிர்க்கவும். ஏனெனில் அவை ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.

நான் ஸ்டிக் சட்டிகளை பயன்படுத்தவும் :

நான் ஸ்டிக் சட்டிகளை சமைக்க பயன்படுத்தினால், அதிக எண்ணெய் மற்றும் வெண்ணெய் செலவாகாது. அதனால் ஆரோக்கியமான உணவை சமைக்கலாம்.

சமையல் ஸ்ப்ரே பயன்படுத்தவும் :

சமைக்கும் போது கொழுப் பின் அளவை குறைக்க வேண்டுமா? அப்படியானால் சமையல் ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள். இந்த ஸ்ப்ரேவில் எண்ணெயை லூப்ரிகண்டாகவும், வெண் கருக்கொழுப்பை குழம்பாக்கியாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனை சிறிது அளவு சமையலுக்கு பயன்படுத்தினால் போதுமானது.

உப்பு சேர்க்கும் முறை :

கைக்கு வந்த அளவில் உப்பை உணவில் சேர்ப்பதற்கு பதில் முதலில் உணவை ருசித்து பாருங்கள். சமைத்து முடிக்கும் நேரத்தில் சமைத்த காய்கறிகளில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய், வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தலாம். இது உப்பு சேர்த்தால் கிடைக்கும், அதே சுவையை நமக்கு அளிக்கும்.

எண்ணெய்க்கு பதில் மாற்றுப் பொருட்களின் பயன்பாடு :

எண்ணெய்க்கு பதிலாக மாமிசத்தை அவித்த நீர், ஒயின், எலுமிச்சை ஜுஸ், வினிகர் அல்லது தண்ணீரை கூட பயன்படுத்தலாம். இவை அனைத்தும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்கும்.

குறைவான கொழுப்பளவை கொண்ட பால் பொருட்களை பயன்படுத்துங்கள் :

சூப் அல்லது சாஸ்களில் க்ரீமை பயன்படுத்துவதற்கு பதில், குறைவான கொழுப்பை கொண்ட தயிர், பால், ஆடை நீக்கிய பால் அல்லது கார்ன் ஸ்டார்ச்சை பயன்படுத்தலாம்.

அதிக உப்புள்ள பண்டங்களை தவிர்க்கவும் :

உப்பின் பயன்பாட்டை குறைக்க நற்பதமுள்ள காய்கறிகளை வாங்குங்கள். டப்பா வில் அடைத்த காய்கறிகள் கெட்டு போகாமல் இருக்க அதிக உப்பு சேர்க்கப்பட்டி ருக்கும். அதை பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால் அவ்வகை உணவுகளை தவிர்க்கவும்.

எண்ணெய் பயன்பாடு :

சூடான சட்டியில் காய்கறிகளின் மீது லேசான அளவு எண்ணெயை தெளித்து விடுங்கள். இதனால் காய்கறிகள் அதிகமான எண்ணெயை உறிஞ்சாமல் இருக்கும் அல்லது முதலில் காய்கறிகளை மைக்ரோ ஓவனில் சமைத்து, பின்னர் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் மட்டும் வதக்கினால் போதுமானது.

சாஸ்களின் பயன்பாடு :

உணவுகளை அலங்கரிக்க சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாஸ்களையும், சுவையூட்டும் பொருட்களையும் பயன்படுத்துங்கள். அதற்கு காரணம் இவைகளில் அடங்கியுள்ள அதிக அளவு உப்பு.

வாட்டும் போது எண்ணெய் அல்லது செயற்கை வெண்ணெயை தவிர்க்கவும் வாட்டும் போது, மசித்த அல்லது தூய்மையான பாலாடை கட்டிகளை எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தலாம். ஆளிவிதை களையும் எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தலாம்.

உப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்கவும் :

உப்பின் உட்கொள்ளுதலை குறைக்க, உப்பு அதிகமாக சேர்க்கப்பட்ட பாஸ்தா, நூடுல்ஸ், டப்பாவில் அடைத்த உணவுகள், நீர்ச்சத்தில்லாத பதப்படுத்தப்பட்ட சூப், சிப்ஸ் மற்றும் உப்பு கலந்த நட்ஸ்களை தவிர்க்கவும்.

நீரில் கரையும் வைட்டமின்களை இழந்து விடக்கூடாது :

நீரில் கரையும் வைட்டமின்களை இழந்து விடாமல் இருப்பதற்கு, காய்கறிகளின் தோலை உரிப்பதற்கு பதில் அழுத்தி தேய்க்க வேண்டும். அதற்கு காரணம் ஊட்டச்சத்துள்ள பொருட்கள் அனைத்தும் தோலுக்கு அருகில் தான் உள்ளது.

மேலும் காய்கறிகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைப்பதற்கு பதில், அதனை மைக்ரோ ஓவனில் அல்லது அவிக்க வைத்து சமைக்க வேண்டும். ஒரு வேளை காய்கறிகளை கொதிக்க வைக்க வேண்டுமானால், குறைந்த அளவு நீரை பயன்படுத்துங்கள். மேலும் அதனை அதிக நேரம் கொதிக்க விடாதீர்கள்.

மூலிகை மற்றும் கறிமசால் பொருட்களின் பயன்பாடு :

சமையலுக்கு தேவையான மூலிகைகளும், இலை செடி கொடிகளையும் பயன்படுத்தி உணவுக்கு சுவை மற்றும் வண்ணத்தை கொடுக்கலாம். மேலும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பைட்டோஓய்ஸ்ட்ரோஜென் இவைகளில் வளமையாக உள்ளது. பல சமயங்களில் உப்பு மற்றும் எண்ணெய்க்கு, சிறந்த மாற்றாக அமையும் மூலிகை மற்றும் கறிமசால் பொருட்கள்.

மூலிகையில் உள்ள விசேஷத்தை பயன்படுத்திக்கொள்ளவும் :

மூலிகைகளில் உள்ள ஒரு விசேஷ தன்மை என்னவென்றால், அது உணவின் ருசியை அதிகரிக்கும். அதனால் சமைத்து முடிக்கும் நேரத்தில், இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கியாரண்ட்டி VS வாரண்ட்டி

கியாரண்ட்டி என்றால் என்ன..?

வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

முகலாயர் ஆட்சியின் போது கலந்த உருதுச்சொற்கள்




தபால் - அஞ்சல்
தமாஷ் - கோமாளித்தனம், சேட்டை
தர்ணா - போராட்டம்
பேட்டி - நேர்காணல்
மகால் - மாடம்
மசூதி - பள்ளிவாசல்
பட்டா - ஒப்பு
வசூல் - பணவேட்டை
ரகம் - வகை
போணி - வாணிபம் அல்லது விற்றல் அளவு
தராசு - சீர்தூக்கி

எதிர்காலத்தில் கஞ்சிக்கும் வழி இருக்காது!

''விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் வெளியேறப் போகிறது!''

தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரையிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
''விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது'' என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.

''ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது. ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.
செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.
ராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து 'வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள் செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.

1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்’ ஏறவைத்தது'' என்றார் நம்மாழ்வார்.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்போதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, '40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை. அடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர். பல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராமசாமி.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ''கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது. சொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் 'ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது'' என்றார் சின்னசாமி.

ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 'பார்’ மட்டும்தான் நடக்கும்போலும்!

மீன் பிடிப்பது எப்படி?!!

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.

அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அவன் ,தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும்இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.

'அது எப்படி செயல் படுகிறது ?'என்று கேட்டான். ''சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ''என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.

இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும்.அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.

''வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான்,'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது.இப்படித்தான் நீ மீன் பிடிப்பாயா?அது சரி,இன்றுஇந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்?'மீனவன் சொன்னான்,

''இன்று நீ ஆறாவது.''

****************************
இப்படித்தான் நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி” கோடீஸ்வரர் ஆவது எப்படி” சிறப்பாக தொழில் செய்வது எப்படி” என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர். இதில் எது மீன் , எவர் மீன் பிடித்துக்கொண்டிருப்பவர், எவர் மீன் பிடிக்க கற்றுக்கொள்ள விரும்புபவர் என்று நாம் சொல்லவேண்டியதில்லை .. உங்களுக்கே இப்போது புரியும்.... நன்றி.

மின்சாரம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..

மின்சாரம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..


மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை. மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன்.

155333 டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது.

நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம்.

இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்

http://youtu.be/7TByE86yrt8

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!!

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!! உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்..

Tuesday, October 1, 2013

சீனாவில் தமிழ்..!



சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

பூக்கள் 99

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:


வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங்குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

வண்டிய லாரிக்கடில ஏண்டா பார்க் பண்ண?

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை, இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது...

1) பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

2) சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு, அபாயகரமான அல்லது
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

3) சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

4) ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

5) ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

6) ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

7) கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

9) வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

10) கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

11) நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் அப்சர்வ் செய்கிறது, விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

12) நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் மொபைலின் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும், ஏன் சிம்கார்டு இல்லாத நிலையிலும் கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம், மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

விஞ்ஞான தமிழன்

உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்!
----------------------------------------------------------------------------
ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!

தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!

சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!

1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை

காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!

அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:

“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.

நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு.அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்.வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள்.இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்துகொண்டு வாழ்த்துகிறது.

இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை.அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி.”

உலகின் சிவன் கோயில்கள்:

உலகின் சிவன் கோயில்கள்:


மனித வரலாற்றை வகைபடுத்திய அறிஞர்கள் அதனை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் ,வெண்கலக்காலம் எனப் பலவகையாகப் பிரித்திருக்கின்றனர்.இவற்றுள் மனிதன் மிருகம் போல உண்டு ,இனப்பெருக்கம் செய்த காலத்தில் இருந்து சற்றே மேம்பட்டு,சிந்திக்கத் தொடங்கிய காலத்தை பழைய கற்காலம் எனலாம்.இந்த பழைய கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான அடையாளக் கூறுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திக்கின்றன. இதில் இருந்தே சைவத்தின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.

வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன் கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும் 1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக்கோயில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிஉற்ற நிலையில் காணப்படுகின்றன.டெல்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்புசிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கோயில்களில் இன்றும் கூட திருவாசகம் ஓதப்படுகிறது.இங்கே இருப்பவர்களுக்கு தமிழ்மொழி தெரியாததால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள்.மேலும் ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் தாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன ,.

சுமத்ராவில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம் ,கணபதி சிலை,நந்தி சிலை,ஆகியவை இருக்கின்றன.போர்போநியாவில் உள்ள மலைகுகையில் சிவன் ,விநாயகர் சிலைகள் உள்ளன.

சியாம் நாட்டிலும் கம்போடியாவிலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன்கோயில் இருக்கிறது.இந்த கோவிலில் இப்போதும் பொங்கல் விழ சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் 6000 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட சிவாலயங்களும், அவற்றின் இடிபாடுகளும் கிடைத்துள்ளன.இங்கு கிடைத்த களிமண் எட்டில் சிவா என்ற பெயர் காணப்படுகிறது.

பாபிலோனியர்கள் தங்கள் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில் எல்சடை என்ற பெயரும் உள்ளது. இச்சொல் சூரியனைப்போல சிவந்த சடையை உடையவன் என்று பொருள் தரும்.இரண்டு புறங்களிலும் முத்தலை சூலமும்,கையில் மழுவாயிதமும் கொண்ட சிவபெருமான் காளையின் மீது நிற்பதாக இருக்கின்ற சிலை ஒன்று கிடைத்திருக்கிறது.மேலும் பாபிலோனியர்களின் மாத பெயர்களில் ஒன்று சிவனின் பெயரைக் கொண்டதாக இருக்கிறது.

சிரியா நாட்டில் சிவன்சிலையும் ,சிவன் உருவம் பொறிக்கப்பட்ட வெண்கலத்தட்டும் கிடைத்திருக்கிறது. இந்தத் தட்டில் உள்ள உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றனர்.இவ்வுருவம் வலக்கையில் மழுவும் ,இடக்கையில் ஆருமுனைகளைக் கொண்ட இடியேறுந்தாங்கியபடி இட பத்தின் மீது நிற்பதைப்போலப் பொறிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் உள்ள பாலைவனம் ஒன்றுக்கு சிவன் என்று பெயர் வழங்கி வருகிறது.இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை வணங்குகிறார்கள்.அந்தக் கடவுளுக்கு நந்தி வாகனம் இருக்கிறது.கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களைப் பொது இடங்களில் எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்திருக்கின்றனர். பௌத்த மதத்தில் ஒரு பிரிவான ஷிண்டோயிசம் என்பதில் சிவலிங்கத்திற்குப் பெருமதிப்பு தரப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருஉருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகிறது.

மேலே கூறப்பட்ட சான்றுகளின் மூலமாக உலகின் பல்வேறு இடங்களிலும் சிவன்கோயில்களும், சிவவழிபாடும்,சிவனின் பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும் விழாக்களும் நடந்து வந்தன என்பதை அறிந்து கொள்கிறோம்.உலகமெங்கும் சிவ வழிபாடு பரவிக் கிடந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும் குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன.

மகாபாரதத்தில் வேதவியாசர் அர்ச்சுனனைப் பார்த்து எவன் ஒருவன் அனுதினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறானோ அவன் இந்த உலகில் எல்லாவகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம் என்கிறார்.

"ஓம் நமசிவாய " என்ற சிவா நாமத்தை அன்போடு உச்சரித்தாலே பல பிறவிகளில் செய்த பாவம் விலகும்.சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத் தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற சாதாரண எலி,மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன.இந்த உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல வழியைப் பெறுவதற்கு துணையாக சிவமந்திரம் ,சிவதரிசனம் ,சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஆகும்.இவை மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும் இன்றியமையதாவை.

எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன் சிவபெருமான் .எல்லாம் சிவமயம், எங்கும் சிவமயம்,எதிலும் சிவமயம் என்பதே ஆன்றோர் கொள்கை.

செல்வமே சிவபெருமானே - நூலிலிருந்து

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?



அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!

நான் கடவுள்

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.

அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.

இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!

‘‘அப்படியா?

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!

பறவைகள் வீடு

ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.''

அவரும் தன் வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.

நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே! ''என்றார்.

அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா...!
| பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள் | சுதந்திரம் நமக்குமட்டுமல்ல அவைகளுக்கும்தான்...!

ஏமாற்றாதே.... ஏமாறாதே .......

ஏமாற்றாதே.... ஏமாறாதே  .......
ஒருத்தர் அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு எப்பவும் சந்தேகம் தன்னை அவர் எமாத்துவதா ஒரு ஆதங்கம் இருந்தது அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை எடை குறைவாக இருக்கின்றதுன்னு குற்றம் சாட்டி சண்டை முற்றி ஒருநாள் நீதிபதி முன் வழக்கு வந்தது வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிருத்துக் காட்டிய ரொட்டிக் கடைகாரர், “பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது இப்படித்தான் என்னை பலமுறை ஏய்மாற்றி இருக்கிறார் இவரை தண்டியுங்கள்ணு கூச்சலிட்டார் நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து “என்ன சொல்கிறீர்கள் ஒவ்வொரு முறையும் 50 கிராம் குரைவாக தந்த்து குற்றமில்லையா ? ன்னு கேட்டாரு ஆதுக்கு வெண்ணெய் வியாபாரி ஐயா என்னிடம் எடைக்கல் கிடையாது அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக்கல்லுக்கு பதிலாக பயன்படுத்துவது வழக்கம் பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத்தான் வாங்குகிறேன் அதையே அவ்வாறு பயன்படுத்துவேன் பாக்கெட் மீது 500 கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதுலாக தராசில் பயன்படுத்துவேன் இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சமஎடையாக இருக்கும் என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார் சம்மாக இருந்தது
எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக்கூடாதுன்னு நினைக்கிறாங்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றிக் கூடாதுன்னு ஏன் நினைப்பதில்லை

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.

அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.

துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.

என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.

இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.

தடை செய்யப்பட்ட சில பொருள்கள்:

1. கஸகஸா

2. பான்

3. சுபாரி (beetal nuts), பான் பராக்

அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.
http://www.dubai.ae/en.portal?topic%2CArticle_000827%2C1%2C&_nfpb=true&_pageLabel=home

இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை

தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும் பொருட்களிலும், அமானித பொருட்களிலும் கஸகஸா இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.

சிங்கத்துக்கே இந்த கதி:)

சிங்கத்துக்கே இந்த கதி:)
ஒரு காட்டிலாகா அதிகாரிக்கு, அழகான ஒரு மகள் இருந்தாள்.

ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டில் ஓடியபோது, அவளை ஒரு சிங்கம் பார்த்தது. அதற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அது நேரே காட்டிலாகா அதிகாரியிடம் சென்று, தனக்கு அவர் மகளைக் கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்டது.

அதிகாரிக்கு சிங்கத்திடம் பயம். அதனால், "நோ" சொல்ல முடியவில்லை. "என்ன செய்யலாம்" என்று யோசித்தார். அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது.

அவர் சிங்கத்தைப் பார்த்து, "காட்டு ராஜா......காட்டு ராஜா....என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவளுக்குப் பயம் தெளிந்துவிடும்! அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்!" என்று சொன்னார்.

அந்தப் பெண்மீது கொண்ட ஆசையால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டிலாகா அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.

பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் ஆயிற்று! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, அதை "அடி, அடி" என்று அடித்து விரட்டினார்.

கடை நிறைய இருக்கும் ஐஸ்கிரீம் எல்லாவற்றையும், தானே சாப்பிடவேண்டும் என்றும் சின்னப் பிள்ளைகள் ஆசைப்பட்டால் நடக்குமா?

அதுபோல, நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, "தப்பித்தோம்....பிழைத்தோம்" என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!